புதன், ஜூலை 13, 2016

 
ஒரே நாளில் 3 விசேஷங்கள்:
ஆகஸ்ட் 2-ந்தேதி ஆடி அமாவாசை, 18-ம் பெருக்கு, குருபெயர்ச்சி

இந்த வருடம் ஆகஸ்ட் 2-ந்தேதி அன்று ஆடி அமாவாசை, 18-ம் பெருக்கு, குருபெயர்ச்சி போன்ற முக்கிய 3 விசேஷங்களும் சேர்ந்து வருகிறது. ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதே சமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.

இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது.
 
ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசேஷத்திலும் விசேஷமாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு (பயிர்குழிஅமைத்து) வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர் கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள். ஆண்டிற்கு ஓருமுறை குருபெயர்ச்சி நடக்கிறது. இந்த நல்ல நாளில் குரு பகவான் பார்வை கிடைத்தால் கோடி நன்மை கிடைக்கும் ஆகவே நம்மில் பலர் தங்களது ராசிக்கு குருபகவான் ஆதிக்கம் வருமா? என்று எதிர்பார்ப்பார்கள்.

குருபெயர்ச்சி நாளில் குருபகவான் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சிலர் ராசிக்கு ஏற்றவாறு பரிகாரம் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். ஆகவே குரு பெயர்ச்சி எப்ப வரும்? என்று நம்மில் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி அமாவாசை, பதினெட்டாம் பெருக்கு, குருபெயர்ச்சி ஆகிய விசேஷங்களும் ஓரே நாளில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி வருகிறது.

இதை நம்மவர்கள் விசேஷத்திலும் விசேஷமாக கருதுகிறார்கள். அதுவும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று விசேஷங்களும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி அன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்பது சந்தேகமில்லை.