வெள்ளி, மார்ச் 04, 2016

தேவாங்கர்கள்

தேவல முனிவரும் அவதாரங்களும்
 
கயிலையில் சிவபெருமான் அம்மையுடன் கொலுவீற்றிருந்தார். உலகைப் படைக்கத் திருவுளம் பற்றினார். அருகிருந்த அம்மையை நோக்கினார். அப்போது அன்னைபராசக்தி ஒளிவடிவாக முக்குணவடிவில் தோன்றினார். உடனே ரஜோகுணத்தில் பிரம்மாவும் சத்துவகுணத்தில் திருமாலும் தமோகுணத்தில் உருத்திரனும் தோன்றினர். மூவருக்கும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களை முறையே செய்யும் பணியைச் சிவபெருமான் அளித்தார்.

பிரம்மதேவன், திருவருளின் துணையால் செடிமுதற் கொண்டு மனிதன் ஈறாக உள்ள பல்வேறு மநுவையும் படைத்தார். மநு என்னும் இம்மன்னன் எல்லாரும் உடுக்கும்படியாக ஆடைகளைக் காம்பிலி நகரிலிருந்து தயாரித்து அளித்து வந்தான்.

செய்து வந்த அருட்தொண்டின் சிறப்பாலும் தவம் பொறை கருணை மூதறிவு சினமின்மை முதலான நற்குணங்கள் உடையவராய் இறைவனை எல்லையில்லா பக்தி பூண்டு வழுத்தி அருச்சித்து வந்ததாலும் இவர் பிறவிக்கு ஏதுவாகிய வினைமுற்றிலும் நீங்கப்பெற்றுத் திருவருளுக்கு உரியவரானார். உரிய காலத்தில் திருவருட்டுணை கொண்டு சிவனடி சேர்ந்தார்.
"அனைய வன்பெருந் தவம் பொறை கருணைமூ தறிவு
சினம கன்றபற் பலகுணத் தெவரினுஞ் சிறந்துன்
மனமு வந்திட வழுத்தியர்ச் சித்த தான் மயக்க
வினைத விர்ந்தசா யுச்சியமாம் பதத்தின் மேவினனால்"
 
மநுவுக்குப் பின் ஆடைகளை நெய்து அளிப்பாரின்ரி தேவர்களும் மக்களும் மிகுந்த வருத்தத்தோடு இலைகளையும் தழைகளையும் மரவுரியையும் அணிந்து மானங்காத்து வந்தனர். இது யாவருக்கும் பெருங்குறையாயிருந்தது. அதனால் தேவர்கள் யாவரும் ஒன்று கூடி தங்கள் குறையை முறையிட்டுக்கொள்ள பிரம்மாவுடன் திருக்கயிலை அடைந்தனர். சிவபெருமானை அணுகி ஆடையில்லாமல் தாங்கள் படும் அவதியை எடுத்துக் கூறினர். தேவர்களின் குறை கேட்ட சிவபெருமான் யாதும் பேசாது மௌனந் தாங்கினார். அப்போது அவர் உள்ளத்தினின்றும் தேவர்கள் போற்ற காரிருள் ஓட்டும் முழுமதியன்ன ஒரு பேரொளி தோன்றி அது இமைக்கும் நேரத்தில் ஒரு ஆண் உருப்பெற்று நின்றது.
இவ்வாறு ஆணழகனாக நின்ற அவன், தனது அகன்ற மார்பில் முப்புரி நூலும், அங்கங்களில் திருநீறும் கண்டிகையும், கரத்தில் கமண்டலமும், விரலில் பவுத்திரமும் தாங்கி நின்றான்.

தேவர்கள் துயர்துடைக்க வந்த இவன் பொறுமை மாதவம் புண்ணியம் கருணை நல்லறிவு உறுதி நீதி பேரின்பம் உண்மை புகழ் ஒழுக்கம் சீலம் முதலான நற்பண்புகளெல்லாம் ஒன்றாய்த் திரண்ட ஒரு உருவாய் இருந்தான்.

இவன் அரும் பெரும் கலைகளுக்கெல்லாம் கடல் போன்றவன். சிவபக்தியிற் சிறந்தவன். இத்தகைய குண நலங்களெல்லாம் ஒருங்கே பெற்று குணக்குன்றாய் நின்ற இவன் சிவபெருமான் திருவடிகளில் பணிந்திறைஞ்சி தலைமேல் இரு கைகூப்பி துதித்து வினயமாய்ப் பணிந்து நின்றான்.

அதற்குப் பெருமான் புன்னகை பூத்தவண்ணம் இவ்வுலகுக்கு நீ செய்யவேண்டிய அரும்பணி ஒன்று உளது. அதற்காகவே உன்னை அழைத்தோம்; வருந்தாதே. நீ ஆறு பிறவிகள் எடுத்து உலக இன்பங்களை நுகர்ந்து புகழ் பெற்று ஏழாம் பிறவியில் வீடுபேறு அடைவாய். இப்போது நீ தேவலன் என்னும் பெயரைப் பெறுவாய். நீ திருமாலிடம் சென்று அவர் உந்திக்கமலத்தில் உள்ள நூலைப்பெற்று ஆடைகளை நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக. தேவர்களின் அங்கங்களை உன் ஆடைகள் அலங்கரிப்பதால் உனக்குத் தேவாங்கன் என்ற பெயரும் வரும். நீ ஆமோத நகரை ஆட்சி செய்' என்று அருளினார். தேவலன் என்றால் தெய்வ வல்லமை உடையவன் என்பதும் பொருளாகும்.

தேவாங்க அவதாரங்கள் ஏழு: 
   1. தேவல அவதாரம் (தேவாங்க அவதாரம்)
   2. வித்யாதர அவதாரம்
   3. புஸ்பதந்த அவதாரம்
   4. வேதாள மகரிஷி அவதாரம்
   5. வரருசி அவதாரம்
   6. தேவசாலி அவதாரம்
   7. தேவதாஸ் அவதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக